திரைப்படம்:- நிழல்கள்,பாடல்: தூரத்தில் நான் கண்ட உன் முகம்
ஜானகி அம்மாவின் பாடல்களிலேயே மிக உன்னதமானது இந்த பாடல். கேட்கும் ஒவ்வொரு முறையும் மனம் நிர்மலமான நிலையை அடைந்து விடுகிறது. சோக ரசத்தை இந்த அளவு அனுபவித்து பாடிய பிறிதொரு பாடல் தமிழில் இல்லை. ராஜாவின் மேன்மையை உணர்த்திக்கொண்டே இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.
துரதிஷ்டத்தை அதிஷ்டமாக மாற்றும் வல்லமை கொண்ட இசை என்று இந்தப் பாடலை முன்னுதாரணப்படுத்தலாம். இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டிலும் வெளிவந்த நிலையிலும் படமாக்காமல் கைவிடப்பட்ட பாடல்.
"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம்.
இந்தப் பாடலை எல்லாம் ஒரு காலத்தில் நள்ளிரவு கடந்து வானொலி ஒலிபரப்புச் செய்யும் போது அந்த ஏகாந்த இரவில் இதைக் கேட்கும் போது கிட்டும் சுகமே தனி.
எஸ்.ஜானகியிடம் இம்மாதிரிப் பாடல்களைக் கொடுக்கும் போது பங்கமில்லாது கொடுத்துவிடுவார்.
"தூரத்தில் நான் கண்ட உன் முகம்" பாடலைக் கேட்டவுடன் அப்படியே இழுத்துப் போய் "கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்" (மனதில் உறுதி வேண்டும்) பாடலில் நிறுத்திவிடும். இந்த இரு பாடல்களும் ஒரே ராகம் .
பாடலின் ஆரம்பத்தில் மெலிதான இசையோடு ஜானகி கொடுக்கும் ஆலாபனையைத் தொடர்ந்து
"தூரத்தில் நான் கண்ட உன் முகம் ; நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்"
என்று பாடும் வரிகளை மிகவும் சன்னமாகக் கொடுத்துவிட்டு அதை வரிகளை மீண்டும் பாடும் போது கவனியுங்கள் இன்னும் கொஞ்சம் ஏற்றிப் பாடியிருப்பார். தொலைவின் நீளத்தைத் தன் குரல் வழியே தொனிக்கும் சிறப்பு அது.
பாடலின் மைய இசையில் ஒற்றை வயலின் இயலாமையின் பிரதிபலிப்பாகவும், ஒரு சேர ஒலிக்கும் வயலின்களின் கூட்டு மனதின் ஆர்ப்பரிப்பைப் பகிர்வது போல இருக்கும்.
"ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா"
என்று தன் மனதை ஓய்வெடுக்கச் சொல்லுமாற் போலக் களைத்து விழுகிறது ஜானகியின் குரல்.
தூரத்தில் நான் கண்ட உன் முகம் :ஒரு சோக கீதம் ;இதோ உங்களுக்காக!
பாடல்: தூரத்தில் நான் கண்ட உன் முகம்
திரைப்படம்:- நிழல்கள்-1980; இசை:- இளையராஜா; பாடலாசிரியர்:- பஞ்சு அருணாச்சலம்; பாடியவர்:- S.ஜானகி, கதை, வசனம்:- மணிவண்ணன்; இயக்குனர்:- P. பாரதிராஜா.
~~~~~~~~~~~~~~~~~
பாடல் வரிகள்:
ஆ.. ஆ.. ஆஆ.. ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
வேங்குழல் நாதமும் கீதமும் ம்ம்ம்ம்ம் ஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
வேங்குழல் நாதமும் கீதமும்
மையலின் ஏக்கமும் தாபமும்
மாயன் உனது லீலை இதுவே
ஐயன் எங்கும் தஞ்சம் என் நெஞ்சமே
தினம் அழைத்தேன் பிரபு உன்னையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமாஆஆ
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
காதல் என்னும் கீதம் பாடி
உருகும் ஒரு பேதையான மீரா...
மீரா...மீரா...மீரா...மீரா...மீரா..
வேளை வரும்போது வந்து
காக்கும் கரம் காக்கும் என்று
வீணை மீட்டும் தேவி உள்ளமே
தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு
காலை மாலை பூஜை செய்து சேர்க்கவில்லையா
கனவு போல வாழ்வின் எந்தன்
கவலை யாவும் மாறவேண்டும்
கனவு போல வாழ்வின் எந்தன்
கவலை யாவும் மாறவேண்டும்
இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ
நாளூம் என்னை ஆளூம் துணை நீயே என வாழ்ந்தேன்
மறவேன் மறவேன் மறவேன்
உன் நினைனவுகள் என்னிடம் தினம்
உறவின் பெருமை மறவேன்
வரும் விழி தரும் அதில்
உறவுகள் தெரிவதும் ஒரு சுகம்
வானமும் மேகமும் போலவே
வானமும் மேகமும் போலவே
நீந்திய காலங்கள் ஆயிரம்
மேகம் அறிந்த வானின் தனிமை
இன்று நான் கண்டதும் உண்மையே
தினம் அழைத்தேன் பிரபு உன்னையே
ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமாஆஆ
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்.